உலக சாதனை படைத்த திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 நாட்களில் 1121 இடங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்து உலக சாதனை செய்யப்பட்டு உள்ளது. 4 உலக சாதனை அங்கீகார நிறுவனங்கள் மூலம் கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் பிரதாப்பிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது .




திருவண்ணாமலை மாவட்டம் கோடை காலத்தில் மிகுந்த வறட்சி, குடிநீர் பற்றாகுறை, உழவின்மை என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் முதல்- அமைச்சரின் தொலைநோக்கு திட்டத்தின்படி மழைநீரினை தேக்கி வைத்து உபயோகிக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பணியாளர்களை ஈடுபடுத்தி 30 நாட்களில் பல்வேறு இடங்களில் அதிகமாக பண்ணைக்குட்டைகள் உருவாக்கி உலக சாதனை படைக்க மாவட்டம் முழுவதும் 1,121 பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. 

 இந்த திட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட 541 ஊராட்சிகளில் அந்தந்த பகுதி விவசாயிகளின் வேளாண் நிலத்தில் அவர்களின் ஒப்புதலோடு 1121 பண்ணைக்குட்டைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. 30 நாட்களில் அதாவது கடந்த 10-ந் தேதிக்குள் 1121 பண்ணைக் குட்டைகள் உருவாக்க விவசாயிகளிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. ஒவ்வொரு பண்ணைக்குட்டையும் 72 அடி நீளம், 36 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்டதாகும். இதில் தலா 3 லட்சத்து 64 லிட்டர் மழை நீரினை தேக்கி வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. 

உலகிலேயே எந்த மாவட்டமும் செய்திடாத இந்த புதிய முயற்சியை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் ஏசியா பசிபிக் அம்பாசிடர் கார்த்திகேயன் ஜவஹர் மற்றும் சீனியர் அட்ஜூடிகேட்டர் அமீத் கே.ஹிங்கரோனி, ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் இந்தியன் அம்பாசிடர் ஏ.கே.செந்தில்குமார் மற்றும் சீனியர் அட்ஜூடிகேட்டர் சிவக்குமார், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் அசோசியேட் எடிட்டர் ஜெகன்நாதன், மற்றும் ரெக்காட்ஸ் மேனேஜர் கார்த்திக் கனகராஜு, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் சீனியர் ரெக்கார்ட்ஸ் மேனேஜர் பாலசுப்பிமணியன் ஆகியோர் நேரில் வந்து இந்த 1121 பண்ணைக் குளங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

 பின்னர் அவர்கள் 30 நாட்களில் பல்வேறு இடங்களில் அதிகமான பண்ணைக் குளங்கள் உருவாக்கிய உலக சாதனை என அங்கீகாரம் வழங்கினர். உலக சாதனை அங்கீகார நிறுவனங்களால் மாவட்ட கலெக்டர் முருகேஷ் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான பிரதாப் ஆகியோருக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Previous Post Next Post